புதுச்சேரி, ஏப். 26: புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த சில நாட்களாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் நவீன தொழில்நுட்ப உதவியை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பாஸ்கரனை அதிரடியாக கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சைபர்கிரைம் சீனியர் எஸ்.பி. நாரா சைத்னயா கூறியதாவது: இணையதளத்தில் முகம் தெரியாத நபர்களுடன் பேசவேண்டாம். குறிப்பாக பெண்களுடைய உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு எந்த ஒரு புகைப்படத்தையும் பகிர வேண்டாம். மேலும் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடும்போது பிரைவேட் அக்கவுண்டாக பயன்படுத்த வேண்டும். மேலும் தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் கொடுக்கும் பட்சத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு 45 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு அனைத்து வழக்குகளும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.