விருத்தாசலம், ஜூன் 12: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தரசோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தரசோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர் – அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.12 கோடியே 60 லட்சம் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனால் சவுந்தரசோழபுரத்தில் இருந்து வெள்ளாற்றின் அக்கரையில் உள்ள அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு வரை இணைப்பு சாலையாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் மூலம் வெள்ளாற்றை கடந்து இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வயல்வெளி பகுதியில் உள்ள மழைநீர் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்காக வந்தது. இதில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட காரணத்தால் மேம்பால பணியும் நிறைவடையாமல் தற்காலிக பாலமும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.