காஞ்சிபுரம், ஜூன் 11: காஞ்சிபுரத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. மேற்படி, விருது பெற விரும்புபவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.மேற்காணும் விருதினை பெறுவதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின், அவர்கள் வரும் 20ம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பித்து மற்றும் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல்தளம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.