புதுச்சேரி, ஜூன் 30: புதுச்சேரி பாஜ மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி இன்று அவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜவுக்கு மாநில நிர்வாகிகள், தலைவர்கள் கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் புதிய பாஜ தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்தது.
காலை 11.23 மணிக்கு தேர்தல் அதிகாரி அகிலன், இணை அதிகாரி வெற்றிச்செல்வம் ஆகியோரிடம் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை முன்னாள் எம்எல்ஏ வி.பி ராமலிங்கம் தாக்கல் செய்தார். அப்போது மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தற்போது பாஜ தலைவராக உள்ள செல்வகணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், மாஜி அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு செல்வகணபதி எம்பி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். 12 மணிவரை வி.பி ராமலிங்கத்தை தவிர்த்து, வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வி.பி. ராமலிங்கம் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து தேர்தல் அதிகாரி அகிலன் கூறுகையில், வி.பி ராமலிங்கம் தாக்கல் செய்த வேட்பு மனு சரியான பரிந்துரைகளுடன் இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை (இன்று) வெளியாகும், என்றார்.
இதற்கிடையே இன்று மதியம் 12 மணிக்கு மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் தேசிய பொது செயலாளர் தருண்சோக் முன்னிலையில் வி.பி. ராமலிங்கம் தலைவர் பதவியை ஏற்கவுள்ளார். 2021ம் ஆண்டு பாஜவில் இணைந்த வி.பி ராமலிங்கத்துக்கு, நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது, மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.