புதுக்கோட்டை, மே 20: புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் 441 மனுக்களை கலெக்டர் அருணாவிடம் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அதில், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, திருமயம், விராலிமலை, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிலடம் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 441 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு, கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஒரு ரூ.16,000 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஒரு ரூ.2,500 மதிப்பிலான கைதாங்கியும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,000 வீதம் ரூ.48,000 மதிப்பிலான காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.66,500 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், செம்மொழிநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 6 பள்ளி மற்றும் 6 கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், தமிழ் வார விழாவினை முன்னிட்டு, தமிழ்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற 33 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.