புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை நகருக்குள் காட்டு வெள்ளம் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற மனுக்கள் குழு தலைவரிடம் 9வது வார்டு உறுப்பினர் செந்தாமரை மனு அளித்தார். புதுக்கோட்டையில் சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சி 9 வது வார்டு உறுப்பினர் செந்தாமரை பாலு அளித்த மனுவில் கூறியிருப்பதாவுது: புதுக்கோட்டை மாநகரமானது பூகோள ரீதியாக வடக்கு பகுதி மேடாகவும் தெற்கு பகுதி பள்ளமாகவும் அமையப்பெற்றது. இதனால், மழை காலங்களில் வடக்கு பகுதியில் உள்ள தைலமரக் காடுகளில் பெய்யும் மழை நீர் ஊருக்குள் வந்துவிடுகிறது. இதனால், நகர பகுதியில் பாதிக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. மேலும், நகரின் மைய பகுதியில் உள்ள சாந்தாரம்மன் கோவில், காய்கறி மார்கெட், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஒரு வார காலத்திற்கு மழை நீர் தேங்குவதுடன் கழிவு நீரும் கலந்து விடுகிறது.
தைலமர காடுகள் உள்ள பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் நாங்கள் மாநகராட்சி மூலமாக எந்த பணிகளும் செய்ய முடியவில்லை. எனவே, இது குறித்து ஆய்வு செய்து நகருக்குள் வரும் காட்டு வெள்ளத்தை தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.