* அரசியல், பொழுதுபோக்கு, மத கூட்டங்களில் 200 பேர் பங்கேற்கலாம் * வழிபாட்டு தலங்களில் நேரக் கட்டுப்பாடு நீக்கம் * சினிமா, டிவி ஷூட்டிங்கில் உச்சவரம்பின்றி பணி செய்ய அனுமதி * தமிழக அரசு உத்தரவுசென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் அன்று மட்டும் கடற்கரைக்கு செல்ல பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஊரடங்கின் புது தளர்வாக அரசியல், பொழுதுபோக்கு, மத கூட்டங்களில் 200 பேர் வரை பங்கேற்கலாம் மேலும் சினிமா, டிவி ஷூட்டிங்கின்போது உச்சவரம்பின்றி தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வழிபாட்டு தலங்களில் இருந்த நேரக் கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து, நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 பேருக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 8,867 என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.கடந்த மாதம் 28ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், வருகிற 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.* உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 பேர் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட கலெக்டர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. * புதிய உருமாறிய நோய் கிருமி பரவாமல் தடுக்க, வெளி மாநிலங்களில் இருந்து (புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் மாநிலங்களை தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும். * மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். * தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். * தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பால் கை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்கவும். அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….