திருப்பூர், அக்.25: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அபரிதமாக உயர்த்தப்பட்ட மின்சார நிலைக் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கடந்த 16ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அடுத்த கட்டமாக அடுத்த மாதம் 6ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களை சந்தித்து தொழில் நிலைமை குறித்து முறையிடுவது டிசம்பர் மாதம் 4ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, டிசம்பர் மாதம் 18ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்று அறிவித்தனர். அதன்படி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள டீமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர்கள் டீமா தலைவர் முத்துரத்தினம், நிட்மா இணை தலைவர் கோபிநாத் பழனியப்பன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 எம்எல்ஏக்களை அழைத்து அவர்களிடம் தொழில் நிலை குறித்தும், மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் முறையிடுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.