வேலூர், மார்ச் 24: ேவலூர் அருகே பணத்தகராறில் பிளஸ் 1 மாணவனை கத்தியால் குத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு திப்பைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, லாரி டிரைவர். இவரது மனைவி பத்மா (40). மகன் சஞ்சய் (17), பிளஸ் 1 மாணவன். மூர்த்தியின் குடும்பத்தினருக்கும், அவரது சகோதரரான லாரி டிரைவர் மணிகண்டன் (28) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. 21ம் தேதி மூர்த்தியின் வீட்டிற்கு சென்ற மணிகண்டன், அங்கிருந்த பத்மாவிடம் ரூ.1 லட்சம் கேட்டு தகராறில் ஈடுபட்டாராம். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த சஞ்சய்யின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.