ஊட்டி, மார்ச் 6: தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் பிளஸ் – 1 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது இத்தேர்வுகள் வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள 41 மையங்களில் 3079 மாணவர்கள் மற்றும் 3489 மாணவிகள் என மொத்தம் 6568 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று மொழி பாடத் தேர்வுகள் நடந்தது. தமிழ் தேர்வில் 5901 பேர் எழுதினர். 138 பேர் தேர்வு எழுதவில்லை. 18 பேர் விலக்கு பெற்றிருந்தனர். மலையாள பாடத்தில் 145 பேர் தேர்வு எழுதினர். பிரெஞ்சு பாடத்தில் 410 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் எழுதவில்லை. இந்தி பாடத்தில் 61 பேர் எழுதினர். ஒருவர் எழுதவில்லை. நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை மொத்தம் 6517 பேர் எழுதினர். 140 பேர் எழுதவில்லை. 19 பேர் விலக்கு பெற்றிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்றிருந்த மாணவர்கள் அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர், மொழிப்பாட விலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டன. தேர்வில் காப்பி அடித்தல் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு பறக்கும் படையினர் 81 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.தேர்வு எழுத வந்த மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.