கீழ்வேளூர் மார்ச் 5: நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் கையில் பதாகைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி அமைப்பு பதவி காலம் கடந்த ஜனவரி 5ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் மறு தேர்தலுக்கான அறிவிப்பு இதுவரை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இதனால் தனி அலுவலர்கள் மூலமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட உள்ள சூழ்நிலை மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. தேர்தல் ஆணையம் உடனடியாக கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென தன்னாட்சி அமைப்புகள் சார்பில் பல்வேறு கவன ஈர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பிரதாபராமபுரம் ஊராட்சி மக்களோடு இணைந்து ஊராட்சி தேர்தலின் அவசியம் குறித்தும், உடனே தேர்தல் நடத்த வலியுறுத்தி கடற்கரை பகுதியில் பேரணியாக நடந்து வந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சி தலைவர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார், சிவா கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்பாட்டத்தில் தன்னாட்சி அமைப்பைச் சேர்ந்த சித்தார்த், வினோத்குமார், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.