Saturday, February 15, 2025
Home » பாறை உருண்டதால் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கினர்? கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு

பாறை உருண்டதால் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கினர்? கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு

by MuthuKumar

திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலையில் மலைப்பகுதியில் குடியிருந்த வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். திருவண்ணாமலையில் புயல் காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக, 37 செ.மீ மழை பதிவானது. நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை வெள்ளம் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மேலும், ராட்சத அளவிலான ஒரு பாறையும் உருண்டது. அதனால், மலை பகுதியில் இருந்த ஒரு வீடு மண் சரிவில் முற்றிலுமாக சிக்கிக்கொண்டது. எனவே அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக மாறியது.

தொடர்ந்து மழை பெய்ததால், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சேரும் சகதியுமாக மாறியது. மண் சரியும் நிலை ஏற்பட்டது. எனவே, இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகே, அந்தப் பகுதிக்கு செல்ல முடிந்தது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கிய வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு 8 மணி அளவில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனாலும், மண் சரிவில் சிக்கியுள்ள வீட்டின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், அந்தப் பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள் மலைப்பகுதியில் இருந்து வடிந்த மழை வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மண்சரிவினால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ள வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், எத்தனை நபர்கள் இருந்தனர் என்ற விவரம் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, மண் சரிவில் சிக்கி உள்ள வீட்டில் இருந்தவர்கள் நிலைமை என்ன ஆனது, உயிருடன் உள்ளனரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
திருவண்ணாமலையில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் மிக கனமழை பெய்தது. இதனால் மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முழுவதுமாக சிக்கி உள்ளது. அதில், இருந்தவர்கள் நிலை என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா அல்லது வேறு எங்காவது சென்றுள்ளனரா, எத்தனை நபர்கள் வீட்டுக்குள் இருந்தனர் என்கிற விவரம் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

தொடர்ந்து, அந்தப் பகுதியில் மண் சரிந்து கொண்டிருப்பதாலும், பாறை உருண்டு விழும் ஆபத்தான நிலையில் இருப்பதாலும் இரவு நேரத்தில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருக்கிறது. எனவே, பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் அளித்திருக்கிறோம். அவர்கள் விரைந்து வந்ததும் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மலையடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் ஒரு சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளோம். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகிறோம். மீட்பு பணி மிக விரைவாக நடைபெறும் என்றார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 2 குழந்தை உள்பட 5 பேர் அந்த வீட்டில் வசித்து வந்ததாக கூறினர்,

திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi