உடுமலை, நவ.4: பள்ளிகளில் செயல்படும் தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் வகையிலும், தமிழ் மொழியின் தொன்மை இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்தவும், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களை அறிந்து கொள்ளவும் பள்ளிகளில் செயல்படும் தமிழ் மன்றத்தின் சார்பில் ஆண்டுக்கு மூன்று முறை தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயா தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். பள்ளி தமிழ் மன்ற செயலர் தமிழாசிரியர் சின்னராசு வரவேற்றார். முதுகலை உதவித் தலைமை ஆசிரியர் ஜெயராஜ், பட்டதாரி உதவித் தலைமை ஆசிரியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்னும் தலைப்பில் கலை இளமணி திருநெறிய தமிழரசி உமா நந்தினி பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்க்கூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன. முதுகலைத் தமிழ் ஆசிரியர் கார்த்திகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியர்கள் தைலியண்ணன், ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.