பந்தலூர், மே 3: பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனைச்சாவடி வழியாக கேரளா மாநிலம் வயநாடு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் சுற்றுலாவுக்காகவும் பிற பணிகளுக்காகவும் வந்து செல்கின்றனர்
அவ்வாறு வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்டவைகளை எடுத்து வந்து தமிழக பகுதிகளில் சாலையோரங்களிலும், தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகள், சுற்றுலா தலங்களில் வீசி எறிவதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றது.
அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டனர். பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி பணியில் இருக்கும் ஊழியர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.