பாடலூர், ஜூன் 26: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆலத்தூர்கேட் மெயின் ரோடு பகுதியில் வசிப்பவர் அப்துல்லா (47). வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவி மகமுதா பிவீ (42), பாடாலூரில் உள்ள தனியார் கார்மெண்டில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல், நேற்று வீட்டை பூட்டி வெளியூர் சென்றிருந்தார். வீட்டின் பின்பகுதியில் அவரது மாமியார் ஹாபிபா (70) வசித்து வந்தார்.
நேற்று சுமார் 12 மணி அளவில் வீட்டினுள் சத்தம் கேட்ட ஹாபிபா சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்து மர்ம நபர் ஒருவர் ஓட்டம் பிடித்தான். இது குறித்து மருமகள் மகமுதா பிவீக்கு தகவல் தெரிவித்தார். அவர் திரும்பி வீட்டில் வந்து பார்த்த போது வீட்டினுள் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் 10 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதே போல், நேற்று முன்தினம் புஜங்கராயநல்லூரில் கருணாநிதி என்பவரது வீட்டில் 3 பவுனும், சில நாட்களுக்கு முன்பு நாரணமங்கலத்திலும் தங்க நகைகள் கொள்ளை போனது. அதாவது ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள வீடுகளையே தற்போது கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவதால், ஊருக்கு ஒதுக்குப்புறம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், சந்தேகப்படும்படியான நடமாட்டம் தெரிந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி போலீஇ அறிவுறுத்தி உள்ளனர்.