பாடாலூர், ஜூலை 7: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செல்லதுரை (55) கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆஞ்சநேயர் கோயில் அருகே ஒரு ஹோட்டலில் உணவு அருந்தி விட்டு மீண்டும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்பாளையம் ஊருக்குள் செல்லும் சாலையை கடக்க முயன்றார். அப்போது, செல்லதுரை மீது கண்டெய்னர் லாரி வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், செல்வதுரை அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.