ஈரோடு: ஈரோடு மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்ததையடுத்து தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனையானது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் போன்ற பல்வேறு பகுதியிலிருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. வழக்கமாக 6000 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைந்ததால் ஈரோட்டில் 1 கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனையானது.
இந்நிலையில் கடந்த 1 மாதமாக தக்காளி விளைச்சல் அதிகரித்ததால் விற்பனைக்கு வரும் தக்காளி வரத்தும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, நேற்று ஈரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு 7 ஆயிரத்து 500 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் சின்ன பெட்டி (14 கிலோ) தக்காளி ரூ.130க்கு விற்பனையானது. பெரிய பெட்டி (26 கிலோ) தக்காளி ரூ. 250க்கு விற்பனையானது. இதையடுத்து சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ. 15 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.