நாகப்பட்டினம், ஏப். 28: பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் காரணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று நாகப்பட்டினத்தில் நடந்த தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செய்யதுஅலிநிஜாம் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முஜிபுர்ரகுமான், மாநில செயலாளர் முகம்மதுயாசிர் ஆகியோர் பேசினர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல்களில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டுளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த பாதுகாப்புக்குறைபாடுகளை ஆராயவும் நிரந்தரமாக சரி செய்ய பரிந்துரைகளை வழங்கவும் ஓய்வு பெற்ற நேர்மையான ராணுவத்துறை நிபுணர்களை கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும். தமிழகத்திலும், இந்திய அளவிலும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடாமல் உண்மையை வெளியில் கொண்டு வர அயராது உழைக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பது.
சமூக வலைத்தளங்களில் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நபர்கள் மீது திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்ப் வாரிய திருத்தச்சட்டத்தின் பல்வேறு நடைமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது வரவேற்கத்தக்கது, மே முதல் வாரம் இவ்வழக்கை முழுமையாக விசாரிக்க உள்ள உச்சநீதிமன்றம் இந்த சட்டம் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது எனவும் தவறான நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அறிவித்து, இந்த சட்டத்திருத்தத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு பயனளிக்கும் எனும் பச்சை பொய் சொல்லி வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வந்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றத்துடிக்கும் ஒன்றிய பாஜ அரசை வன்மையாக கண்டிப்பது. வக்பு வாரிய திருத்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் சர்புதீன் நன்றி கூறினார்.