தக்கலை, மே.6: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் 26 சுற்றுலா பணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்தும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தக்கலையில் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமை வகித்தார். எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன், சுனில் குமார், ரோசிட்டா திருமால், ஐயப்பன், சதீஷ், மாநகர் தலைவர் சிவசுதன் மற்றும் அஜித்குமார், திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.