பவானி, ஏப். 17: பவானி, தேவபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ் மகன் பிரகாஷ் (45). இவர், நேற்று வீட்டை திறந்து வைத்துவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். குடும்பத்தினர் கவனக்குறைவாக இருந்த நிலையில், மீண்டும் திரும்பிய பிரகாஷ், வீட்டில் வைத்திருந்த 5.5 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, பவானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சசிகுமார் (35), இவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. டீ மாஸ்டரான சசிகுமாரை பிடித்து விசாரித்ததில் 5.5 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நகையை பறிமுதல் செய்த போலீசார் சசிகுமாரை கைது செய்தனர்.