புதுச்சேரி, ஜூன் 11: புதுச்சேரி லாஸ்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும்போது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர், புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டை நடுத்தெருவில் உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இந்த வீட்டை வாங்கியவர், அதை இடிப்பதற்காக காண்ட்ராக்ட் விட்டிருந்த நிலையில், மணிகண்டன் அங்கு கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்து இப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி, முதல்மாடி பகுதி இடிக்கப்பட்ட நிலையில் இரவு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை பார்த்தபோது மணிகண்டன், வீட்டின் மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தினர். மணிகண்டன் வேலை செய்த வீட்டின் முதல்மாடியில் சாப்பாடு பொட்டலம், மது பாட்டில்கள் கிடந்தது. வீட்டை இடிக்கும் பணியில் அவர் மட்டுமே செய்து வந்ததும், மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது. குடிபோதையில் நள்ளிரவில் அல்லது அதிகாலையில் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். கீழே கட்டிட இடிபாடு கற்கள் மீது விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்ைட இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.