கொள்ளிடம், மே 11: கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மகளிர் விடியல் பயணம் அரசு பேருந்து துவக்க விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர பழையாறு கிராமத்திலிருந்து புதுப்பட்டிணம், தற்காஸ், தாண்டவன்குளம், பழைய பாளையம், மாதானம்கொப்பியம், ஓதவந்தான்குடி, திருமயிலாடி, புத்தூர், எருக்கூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சீர்காழிக்கு சென்று வரும் வகையில் மகளிர் விடியல் பயணம் அரசு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துக்கு கிராம மக்கள் மலர்மாலை அணிவித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர்.
இதேபோல் 10 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 3 பஸ் நிறுத்தங்களில் ஒன்று சேர்ந்து பாராட்டு நிகழ்ச்சி நடத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.