திருப்பூர், அக்.20: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம், தியாகி பழனிச்சாமிநகரை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருப்பூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த பகுதியில் மழைநீர் வடிகால் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. இது போல் தேங்குகிற மழைநீரால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மேயர் தினேஷ்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் 3வது வார்டு செயலாளர் மூர்த்தி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.