Thursday, September 28, 2023
Home » பள்ளி மாணவ, மாணவிகள் 1,330 திருக்குறளை ஒப்பித்தால் ரூ.15,000 பரிசு

பள்ளி மாணவ, மாணவிகள் 1,330 திருக்குறளை ஒப்பித்தால் ரூ.15,000 பரிசு

by MuthuKumar

புதுக்கோட்டை, செப்.6: உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2023-24ம் ஆண்டுக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகப் கொள்ளப்பெறும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படுவர்.

ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது. ஏற்கனவே முற்றோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களும், புதிதாக முயல்பவர்களும் பங்கேற்க ஏதுவாக உரிய கால அவகாசம் வழங்கப்பெற்றுள்ளது. முற்றோதல் திறனுடையோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, கட்செவி மூலமாகவோ (914322-228840) அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 914322-228840 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை (2 படிகளில்) மாணவர்கள் 20.12.2023ம் நாளுக்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், முதல்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை – 622 005. (மின்னஞ்சல் முகவரி: pdkttamilthai@gmail.com என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?