அரியலூர், ஏப்.25: பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறை பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்ததாவது:பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்திய வேண்டும். தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், புகையிலை இல்லா கல்வி வளாக சான்றிதழை அனைத்து பள்ளிகளும் பெறவேண்டும். அயோடின் பற்றாக்குறையினால் அறிவு கூர்மையின்மை, கருவளர்ச்சி சிதைவு, முன்கழுத்து கழலை போன்ற நோய்கள் வருவதிலிருந்து காத்துகொள்ள அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும், மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் குறித்தும் ஆய்வு செய்து, குறியீட்டை அடைதல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தாய் சேய் நலனில் கூடுதல் கவனத்துடன் மருத்துவர்கள் செயல்பட வேண்டும்.
தொடர்ந்து, காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொற்றுநோய்கள் குறித்தும் அவைகள் பரவும் விதம் குறித்தும், பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சுகாதாரத்துறையின் மூலமாக பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக இக்கூட்டத்தில் பொது சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் 12 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் ரத்தினசாமி, வழங்கினார். இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மாரிமுத்து, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.மணிவண்ணன், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.