அரவக்குறிச்சி, மே 7: அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சார்பில் தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பெருகிவரும் வாகன போக்குவரத்தின் காரணமாக சாலை அகலப்படுத்துதல் பணி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2024-25ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் கரூர் கோட்டம் அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சிவரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளபட்டி அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் சிறு சிறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.
இதில் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.