திண்டுக்கல், ஜூலை 5: திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், seniorcitizen.tnsocialwelfare என்ற கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் மூத்த குடிமக்கள் நலன் கருதி செப்டம்பர் 2023ல் seniorcitizen.tnsocialwelfare என்ற கைப்பேசி செயலி வெளியிடப்பட்டது. இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மூத்த குடிமக்களும் கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.