மேலூர், ஜூன் 25: மேலூர் அருகே உள்ள ஆட்டுக்குளம் ஊராட்சியில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு கதவு இலக்க எண்கள் ஆரம்பத்தில் இருந்து கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பழைய கதவு இலக்க எண்களை மாற்றி புதிய கதவு இலக்க எண்கள் அளிக்கப்பட்டது. வீட்டு வரி ரசீதுகளிலும் அந்த இலக்க எண்கள் பதிவு செய்து தரப்பட்டது.
இதனால் ஆதார் கார்டு, வங்கி கணக்கு, குடும்ப அட்டை, சிலிண்டர், பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு அட்டை, லைசென்ஸ், மருத்துவ காப்பீட்டு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை, மின் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி கல்லூரி முகவரி, பான் கார்டு ஆகியவற்றில் உள்ள பழைய கதவு இலக்க எண்களை மாற்றி புதிய எண்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தங்களது பழைய கதவு இலக்க எண்களே வேண்டுமென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.