சிவகாசி, ஏப்.23: பருவ மழையை சேமிக்கும் வகையில் சிவகாசியில் ஊருணிகளை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் வகையில் ஊருணிகள், குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருணிகள் தான் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இதில் கட்டசின்னம்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி,
பூலாவூரணி, பேராபட்டி, நடையனேரி, எரிச்சநத்தம், சித்தமநாயக்கன்பட்டி, நாரணாபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் ஊருணிகள், குளங்கள் தூர்வாரப்படாமல் மண் மேவி காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்க முடியாத நிலை உள்ளது. எனவே அனைத்து ஊருணிகளையும் தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதுடன் தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.