Tuesday, June 17, 2025
Home மாவட்டம்நீலகிரி பருவமழையில் விழுந்த 100 மரங்கள் அகற்றம்: பேரிடர் மீட்பு பணிகளுக்காக ஈரோடு, திருப்பூரில் இருந்து 25 பேர் வருகை

பருவமழையில் விழுந்த 100 மரங்கள் அகற்றம்: பேரிடர் மீட்பு பணிகளுக்காக ஈரோடு, திருப்பூரில் இருந்து 25 பேர் வருகை

by Suresh

ஊட்டி, மே 29: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் பலத்த காற்றுடன் கூடிய மழையின் போது விழுந்த 100க்கும் மேற்பட்ட மரங்களை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் அகற்றினர். கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8 நாள் முன்னதாக கடந்த 24ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இதன் தாக்கம் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி நள்ளிரவு முதல் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது.

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு, மின் துண்டிப்பு, வீடு இடிதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்து வருகின்றனர். 5 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் விழுந்த 100க்கும் மேற்பட்ட மரங்களை தீயணைப்புத்துைறயினர் வெட்டி அகற்றி உள்ளனர். அபாயகர மரங்கள் உள்ள பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்களை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்து அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளது. கடந்த 5 நாட்களில் மாவட்டம் முழுவதும் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. பேரிடர் மீட்பு பணிக்காக ஈரோடு, திருப்பூரில் இருந்து 25 தீயணைப்பு வீரர்கள் நீலகிரி வந்துள்ளனர். அவர் கூடலூரில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi