நன்றி குங்குமம் டாக்டர் ஒரு தகவல் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பரபரப்பாக்கிவிட்டது. இந்திய தொழில்துறை சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத நிறுவனமான ரிலையன்ஸ், மருத்துவத்திலும் கால் பதிக்கப் போகிறது என்பதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம். Cheap and Best ஃபார்முலா, இலவச சலுகைகளை வாரி வழங்குதல் போன்ற வியாபார உத்தியைக் கடைபிடிப்பவர் முகேஷ் அம்பானி என்பதால் பொதுமக்களுக்கும் இது ஆர்வமூட்டும் தகவலாகவே அமைந்துவிட்டது.டெலிகாம் துறையில் தற்போது முகேஷ் அம்பானி ஆடிக்கொண்டிருக்கும் ஜியோ ஆட்டம் எல்லோரும் அறிந்ததுதான். கட்டற்ற இலவச அழைப்புகளையும், டேட்டாக்களையும் வாரி வழங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை 3 ஆண்டுகளில் வளைத்துப் போட்டது ஜியோ. இதே பாணியில்தான் மருத்துவத்திலும் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள். ரிலையன்ஸின் வருகையை உறுதி செய்யும் விதமாக சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் முகேஷ் அம்பானி பேசியிருக்கிறார். ‘மருத்துவத்துறையில் நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நேரம் இது’ என்ற அவரது பேச்சு கவனிக்கத்தக்கது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.சரி… அப்படி ரிலையன்ஸ் மருத்துவத்துறையில் இறங்கினால் எதைத் தேர்ந்தெடுக்கும்? மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தயாரிப்பையா? மிகப்பெரிய மருத்துவமனை நெட்வொர்க்கையா? என்ற கேள்விகளுக்கு பதில் கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும். மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான வியாபாரம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடியாக இருக்கிறது. இது ஒவ்வோர் ஆண்டிலும் 20 சதவிகிதம் வரை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால் ரிலையன்ஸ் இந்த மருத்துவப் பரிசோதனைகள் வியாபாரத்தில் இறங்கினாலும் ஆச்சரியம் இல்லை என்ற தகவலும் இருக்கிறது. ஒருவேளை ஜியோ ஃபார்முலாவைப் போல, குறைந்த கட்டணத்தில் மருத்துவப் பரிசோதனைகளை ரிலையன்ஸ் செய்யத் தொடங்கினால் மற்ற நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். இது போட்டி நிறுவனங்கள் கவலை தரக்கூடியதாகவும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும்தான் இருக்கும். முகேஷ் அம்பானி மிகப்பெரிய பிசினஸ் மேன் என்பதற்காக, இது எளிதான காரியமும் இல்லை. திடீரென தனக்கு அனுபவமே இல்லாத மருத்துவத்துறையில் ஈடுபடுவதும், அதில் எளிதில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை. ஏனெனில் ஏற்கெனவே விலை குறைப்பு நடவடிக்கைகள் எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. முக்கியமாக, மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் தரமாக இருக்க வேண்டுமே தவிர, விலை குறைவாக இருப்பது பெரிய விஷயம் இல்லை. உயிர் காக்கும் விஷயத்தில் ஆபத்தான Cheap and best விளையாட்டை எல்லோரும் தேர்ந்தெடுப்பார்களா என்பது விவாதத்துக்குரிய செய்திதான்.இன்னொரு கோணத்தில் பார்த்தால், சிதறிக் கிடக்கும் மருத்துவப் பரிசோதனை வியாபாரத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ரிலையன்ஸின் முயற்சி மிகப்பெரிய வெற்றியையும் தரலாம். சர்க்கரை நோய் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன் என்று பரிசோதனைக் கருவிகளுக்கான தேவைகள் இன்னும் நாடு முழுவதுமாகப் போய்ச் சேர வேண்டிய தேவையையும் முகேஷ் அம்பானி பயன்படுத்திக் கொண்டு சாதிக்கலாம். எது எப்படியோ… ரிலையன்ஸின் மருத்துவத்துறை வருகை மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பார்க்கலாம்!தொகுப்பு: ஜி. ஸ்ரீவித்யா