Friday, January 17, 2025
Home » பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க உள்நாட்டு விமானங்களுக்கு 2 டெர்மினல்கள்: சென்னை விமான நிலைய நிர்வாகம் ஏற்பாடு

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க உள்நாட்டு விமானங்களுக்கு 2 டெர்மினல்கள்: சென்னை விமான நிலைய நிர்வாகம் ஏற்பாடு

by Ranjith

 

தாம்பரம், செப்.25: இந்தியாவிலேயே மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். இங்கிருந்து தினசரி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். குறிப்பாக, பீக் ஹவரில் விமான நிலையம் சென்ற அனைவருக்கும் அங்கு எந்தளவுக்கு கூட்ட நெரிசலாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரியும். இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமானங்களுக்கு 2 டெர்மினல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இது பயணிகளின் நெரிசலை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அதிகாலையில் அவசரமாக கிளம்புவோருக்கு இது பெரியளவில் உதவும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சர்வதேச விமான சேவை (டி-4) சர்வதேச முனையத்தில் இயங்கி வந்தது. இவை இப்போது புதிய ஒருங்கிணைந்த முனையத்திற்கு (டி-2) மாற்றப்பட்டுள்ளது. இப்போது, அனைத்து உள்நாட்டு விமானங்கள் (டி-1) டெர்மினலில் இருந்து இயக்கப்படுகிறது. அதை பிரித்து, முன்பு சர்வதேச விமானங்கள் இயக்கிய (டி-4) டெர்மினலை தான் இரண்டாவது உள்நாட்டு முனையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே டி-4 டெர்மினலை புனரமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டோம். ஓரிரு வாரங்களில் அந்த பணிகள் முடிவடையும். அங்கிருந்த இமிக்ரேஷன் கவுன்டர்கள் இப்போது அகற்றப்படுகின்றன. 3 லக்கேஜ் கன்வேயர் பெல்ட்களை புதிதாக அமைக்கிறோம்.

மேலும், விமான நிலையத்தில் ஆங்காங்கே சில மாற்றங்களை செய்யவுள்ளோம். அதன் பிறகு விமான நிலையத்தில் தூய்மை பணிகள் நடக்கும். அதன் பின்னரே விமான நிலையம் திறக்கப்படும். இப்படி 2 உள்நாட்டு முனையங்களில் இருந்து விமானங்களை இயக்கினால் அதிகப்படியான விமானங்களை இயக்க முடியும். இதன் மூலம் அதிகப்படியான பயணிகளை கையாள முடியும். தற்போதுள்ள திட்டப்படி இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தொடர்ந்து டி-1 முனையத்தில் இருந்து விமானங்களை இயக்கும். அதேநேரம் ஏர் இந்தியா, ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா ஆகியவை டி-4 முனையத்திற்கு மாற்றப்படும்,’’ என்றார்.

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi