மதுரை, மே 3: மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் எஸ்ஐ சேதுராமன் தலைமையில் ஏட்டுக்கள் அருள்குமரன், கண்ணன் ஆகியோர் ராமையாதெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் போலீசாரை பார்த்ததும் முட்புதருக்குள் மறைந்து இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற பீடிமணி(28), ஜீவாநகரை சேர்ந்த அஷ்ரப்அலி என்ற பரோட்டா(37) மற்றும் சோலையழகுபுரத்தை சேர்ந்த பரமசிவம்(29) ஆகியோர் எனத்தெரிந்தது. மேலும், அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் கீரைத்துறை எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் காமராஜர்புரத்தை சேர்ந்த முகேஷ்சர்மா(23) எனத் தெரிந்தது. அவரிடம் பெரிய வாள் இருந்தது. மக்களிடம் வழிப்பறி செய்வதற்காக வைத்திருந்ததாக போலீசாரிடம் அந்த வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, வாளை பறிமுதல் செய்தனர்.