தஞ்சாவூர், ஜூன் 25:தஞ்சை பனங்காடு பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை பூக்காரத்தெரு அருகே பனங்காடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தஞ்சை பூக்காரத்தெருவில் இருந்து புதுஆற்றின் கரையோரத்தில் உள்ள சாலை வழியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள், மாணவ, மாணவிகள் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பனங்காடு பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக நீண்ட தூரத்துக்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஒரு சிலர் இறைச்சி கழிவுகளையும் முட்டைகளாக கட்டி சாலையோரத்தில் போட்டுச் செல்கின்றனர்.
இந்த குப்பைகளை நாய்கள் இழுத்து சாலை நடுவே போட்டுச்செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.