தர்மபுரி, ஜூன் 10: தர்மபுரி பட்டு வளர்ச்சி துறை சார்பில், பட்டுக்கூடு ஏல அங்காடி, தர்மபுரி நான்கு ரோடு அருகே செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் இருந்தும், ஈரோடு மாவட்டம் சித்தோடு, சத்தியமங்கலம், கரூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும், தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர். தர்மபுரி ஏலங்காடியில் பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 59 விவசாயிகள் 4,141 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இந்த பட்டுக்கூடுகள் ரூ.22லட்சத்து 5ஆயிரத்து 887க்கு ஏலம் போனது. பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக நேற்று ஒரு கிலோ வெண்பட்டு கூடு ரூ.621, குறைந்தபட்சமாக ரூ.363, சராசரியாக ரூ.527க்கு ஏலம் போனது.
பட்டுக்கூடு அங்காடியில் ரூ.22 லட்சத்திற்கு ஏலம்
0
previous post