கெங்கவல்லி, ஜூலை 7: சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், தகரப்புதூர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் மலர்விழி. இவர் கடந்த மாதம் 11ம் தேதி, வீட்டில் இருந்தபோது, அடிக்கடி வீடியோ கால் மற்றும் வாட்ஸ் அப் கால் செய்து ஒருவர் தொந்தரவு செய்துள்ளார். இதனால், மனம் உடைந்த மலர்விழி தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று திரும்பிய மலர்விழி, கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், பணி நேரத்தில் வாட்ஸ் அப் கால், வீடியோ கால் செய்து பிடிஓ சந்திரசேகரன் தொந்தரவு செய்ததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
இதனிடையே, புகார் கொடுத்து 25 நாட்களாகியும், நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தட்டிக்கழித்து வருவதாக மலர்விழி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிடிஓ சந்திரசேகரனிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களாக ஊராட்சி வரவு -செலவு கணக்கு மற்றும் ஆவணங்களை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அதுகுறித்து கேட்டபோது, என் மீது வீண் பலி சுமத்துகிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஊராட்சி செயலர் மலர்விழி கூறுகையில், ‘அதிகாரிகள் கேட்கும் ஆவணங்கள் தலைவர் இருக்கும்போது முறையாக பராமரிக்கப்பட்டு பிடிஓ ஆய்வு செய்து கையொப்பமிட்டுள்ளார். ஆனால், என்னை பழிவாங்கும் நோக்கத்திலும், சில தவறான நோக்கத்தில் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். எனவே, பிடிஓ மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’ என்றார்.