திருச்சி, மே 10: திருச்சி புதிய பஸ் முனையம் 10 முதல் 15 நாட்களுக்கு பிறகே செயல்பட துவங்கும் என கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்நிலையில் நாளை முதலே பஸ் முனையம் செயல்படத்துவங்கும். அனைத்து பஸ்களும் பஞ்சப்பூர் பஸ் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்ற செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பான வதந்தியாக பரவி வருகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. மேலும் இதுகுறித்து கூறுகையில், புதிய பஸ் முனையத்தில் இருந்து புறப்படும் நகர பஸ்கள் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் எந்தெந்த வழிகளில் செல்ல வேண்டும், நகரத்திற்குள் வர வேண்டும்என்பது உள்ளிட்ட வழித்தட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு எவ்வித சிரமும் ஏற்படாத வகையில் வழித்தடங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் முடிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே பஞ்சப்பூர் புதிய பஸ் முனையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 15 நாட்களுக்கும் மேல் ஆகலாம். இதுகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியாகும். எனவே பொதுமக்கள் பஞ்சப்பூர் பஸ் முனையம் செயல்படத் துவங்கியதாக பரவி வரும் செய்தியை நம்பத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.