பேரையூர், ஏப். 25: தங்கள் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி, பேரையூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் நேற்று திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். பேரையூர் தாலுகா, வண்டப்புலி ஊராட்சி ராமசாமிபுரம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கான ரேஷன் கடை வண்டப்புலியில் உள்ளது. இந்தக் கடைக்கு சுமார் 4 கி.மீ தூரம் நடந்து வந்து ராமசாமிபுரத்தில் வசிப்போர் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனவே தங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கோரி இக்கிராம மக்கள் ஏற்கனவே மனு அளித்துள்ளனர். ஆனால் இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று வண்டப்புலி கிராமத்தில் உள்ள மங்கள்ரேவு – எம்.கல்லுப்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட பொதுமக்கள் முயன்றனர்.
அங்கு வந்த சாப்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் மனு கொடுக்குமாறு கூறி அனுப்பினர். இதனைத் தொடர்ந்து பேரையூர் தாலுகா அலுவலகத்தில் இக்கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை டிஎஸ்ஓ பாலகுமாரிடம் கொடுத்தனர். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ராமசாமிபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற மே மாதத்திற்குள் கடையைத் திறந்து ரேஷன் பொருட்கள் வழங்க இருக்கிறோம்’’ என்றார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதேபோல் நேற்று பேரையூர் தாலுகா அலுவலகத்தில் அணைக்கரைப்பட்டி இந்திரா காலனி கிராம மக்கள் பெண்களுக்கு பொதுக்கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தேர்தல் தாசில்தார் வீரமுருகனிடம் கொடுத்தனர். அவர் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க தாசில்தாரிடம் பரிந்துரை செய்வதாகக் கூறினார். பின்னர் கிராம மக்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.