நெல்லை, மார்ச் 13: நெல்லை மாநகர, மாவட்ட போலீஸ் குறைதீர் முகாம்களில் 21 பேர் புகார் அளித்தனர். இந்த புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி, எஸ்பி சிலம்பரசன் உறுதி அளித்தனர். நெல்லை மாநகர போ லீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று போலீஸ் குறைதீர் முகாம் நடந்தது.
இதில் நெல்லை மாநகரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மனுவாக அளித்தனர். அந்த புகார்களை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி பெற்றுக்கொண்டார். அந்த புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கக்கோரி துணை கமிஷனர்கள் கீதா, வினோத் சந்தாராம் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இந்த முகாமில் தலைமையிடத்து துணை கமிஷனர் விஜயகுமார் கலந்து கொண்டார்.
இதுபோல் நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் குறைதீர் முகாம் நடந்தது. இதில் நெல்லை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 16 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனுக்களை அளித்தனர். அந்த புகார்கள் தொடர்பாக எஸ்பி சிலம்பரசன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.