நெல்லை: நெல்லையில் விசாரணையின்போது போலீசார் கண்டித்ததால் மனமுடைந்த தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். பிரதீப்புக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து வீரலட்சுமி டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த நேற்று முன்தினம் இரவு பிரதீப்பை வரவழைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரை போலீசார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த பிரதீப், வயல் தெரு பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.