செம்பனார்கோயில், ஜூன் 2: தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற முகாம்களை நடத்தி செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் பூம்புகார் தொகுதி செம்பனார்கோயில் அருகே திமுக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவாழைக்கரை, கஞ்சாநகரம் மேலையூர், செம்பனார்கோயில் ஆகிய ஊராட்சிகளுக்கு நடத்தப்பட்ட முகாமில் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை, கலைஞர் உரிமைத்தொகை கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு அதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமை வகித்து, 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளுக்கான ஆணையை வழங்கினார். இதில் ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார ஊராட்சிகள் வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்கரபாணி, ஊராட்சி செயலாளர்கள் நாகராஜன், சுவாமிநாதன், வடிவேல், பொன்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.