திண்டுக்கல், ஏப். 23: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் விஜயகாந்த் தலைமையில் பொது செயலாளர் அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழநி சபரி, மாநில செயலாளர் பிரதீப், மாவட்ட செயலாளர் ராஜா, அவை தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் வந்து கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: நிலக்கோட்டை ஒன்றியம் சித்தாதிபுரம் அருகே அரசிடம் முறையாக உரிமம் பெற்று கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 10 மடங்கு கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.
மேலும் அதிகமான வெடி பொருட்களை வைத்து பாறைகளை வெடிக்க செய்வதால் அருகிலுள்ள விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது. குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. மேலும் கல்குவாரியில் கற்களை மட்டுமே வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள கிராவல் மண்ணையும் சேர்த்து சட்டத்திற்கு புறம்பாக எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.