நித்திரவிளை, ஜூன் 23: நித்திரவிளை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து சமையலறை தரைமட்டம் ஆனது. குமரி மாவட்டம் நித்திரவிளை வெட்டைவீடு பகுதியை சேர்ந்தவர் ஆங்களின் (43). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று காலை வழக்கம் போல ஆங்களின் குடும்பத்துடன் சர்ச்சிற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட்டால் ஆன சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சமையலறை தரை மட்டமானது.
மேலும் சமையல் அறையில் இருந்த அனைத்து பொருட்களும் நாசமாயின. வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் அந்த பகுதியில் தீ பரவாமல் இருக்க தீ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கேஸ் சிலிண்டர் வெடித்து சமையலறை தரை மட்டமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.