அருமனை, ஜூலை 6: வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற குமரி தொழிலாளி பலியானார். குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு தோட்டம்விளை பகுதியை சேர்ந்தவர் சசி (52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக சவுதி அரேபியா நாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஊர் திரும்பிய அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார். அவருடைய அண்ணணும் அங்கு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சசி உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஊர் திரும்ப இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சசி, மாடிப்படியில் நடந்து சென்றபோது தவறி விழுந்து, தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். இதனை அறிந்த அவருடைய அண்ணன் குமரியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தொிவித்தார். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த மனைவி மற்றும் மகன், மகள் கதறி அழுதனர். இதற்கிடையே பலியான சசியின் உடலை சவுதி அரேபியா நாட்டில் இருந்து குமரிக்கு கொண்டு வர ஒன்றிய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.