களக்காடு, நவ.1: திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி, பிளசிங் தெருவை சேர்ந்தவர் ராபர்ட் மகன் ராஜன் (32). இவர் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில், தாயார் பிரேமாவுடன் (54) நாங்குநேரியில் இருந்து திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார். தட்டான்குளம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார், பைக்கை முந்தி சென்றது. அப்போது திடீரென கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற பிரேமா படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த ஏமன்குளத்தை சேர்ந்த ராபின்சன் மகன் ஜோஸ் வேதகுமார் (28) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.