நாகப்பட்டினம், ஜூன் 24: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 284 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.2,185 மதிப்பில் நடைபயிற்சி உபகரணமும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,728 மதிப்பில் சிறப்பு இருக்கை, செவித்திறன் குறையுடைய 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவி, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை என மொத்தம் ரூ.11,913 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ பவணந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.