நாகப்பட்டினம், ஏப். 23: திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ சீயாத்தமங்கை கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் மண்வாரி இயந்திரம் மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பிலும், திருப்புகலூர் கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் ரூ.9.8 லட்சம் மதிப்பிலும், கொட்டராக்குடி கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் ரூ.8.5 லட்சம் மதிப்பிலும் மற்றும் பாசன வாய்க்கால் ரூ.9.2 லட்சம் மதிப்பிலும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
அதனைதொடர்ந்து திருபுகலூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள், புத்தகரம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு, விற்பனை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். திருப்புகலூர் ஊராட்சியில் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு துறை, பால்வளத்துறை, தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கறவை மாடு கடன் வழங்க விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெறுவதையும் ஆய்வு செய்தார்.
ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கண்ணன், காவிரி வடிநிலக்கோட்டம்(நீர்வளத்துறை) உதவி செயற்பொறியாளர் சுப்பரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் நீர்வளத்துறை செல்வகுமார், சரவணன் மற்றும் அரசு பலர் உடனிருந்தனர்.