நத்தம், ஏப். 22: நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு(36). இவரது மகள் பிரித்திகா (7) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் இவரது வீட்டிற்கு அருகே உள்ள செல்வம் என்பவரின் வீட்டில் உள்ள குழந்தைகளுடன் அடிக்கடி சென்று விளையாடுவது வழக்கம். இதனை செல்வத்தின் தாய் குருவம்மாள் (65) கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி பிரித்திகா மீண்டும் விளையாடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சிறுமி வருவதை பார்த்த குருவம்மாள் ஆத்திரமடைந்து, சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் மயக்கமடைந்த சிறுமியை மூதாட்டி சாலையில் தூக்கி வீசி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிறுமியின் தந்தை நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நத்தம் போலீசார் மூதாட்டி குருவம்மாளை கைது செய்தனர்.