பெரம்பலூர், ஏப். 17: பெரம்பலூர், பழைய பஸ்ஸ்டாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ஒரு நபரை பெரம்பலூர் டவுன் போலீசார் கடந்த 2017 ஆகஸ்டு 14ம்தேதி மீட்டு சிகிச்சைக்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன்நகர் பகுதியில் இயங்கி வரும் பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா என்பவரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு பெரம்பலூர் மனநல மருத்துவர் அசோக் என்பவரால் வேலா கருணை இல்லத்தில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்ததொடர் சிகிச்சையின் காரணமாக அவர் நன்கு குணமடைந்தார். பின்னர் அவரிடம் யார் என்பது குறித்து மருத்துவ குழு கேட்டறிந்த போது, ஹரியானா மாநிலம், கடலா ரேவாரி பகுதியைச் சேர்ந்த ஹர்சித் (எ) சந்தன்சிங் (32) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஹர்சீத் அளித்த முகவரியைக் கொண்டு, ஹரியான மாநிலத்திலுள்ள அவரது அண்ணன் பிரேம்குமார் என்பவரை தொடர்பு கொண்டனர். பெரம்பலூர் வேலா கருணை இல்லத்திற்கு நேற்று பிரேம் குமார் வந்தார். பின்னர் சத்தன் சிங்கை அவரது சகோதரர் பிரேம்குமாரிடம், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மன நல மருத்துவர் அசோக் ஆகியோர் ஒப்படைத்தனர்.