குமாரபாளையம், ஜூலை 9: வீடு தோறும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணிக்காக குமாரபாளையம் நகராட்சிக்கு 7 புதிய வாகனங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. குமாரபாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும், வீடு தோறும் செல்லும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை வாங்கி பிரித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். குப்பைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள லாரிகள் போதுமானதாக இல்லை. இதனால் நகராட்சிக்கு மேலும் 7 இலகுரக வாகனங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 3 வாகனங்கள், நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. புதிய வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன் முன்னிலையில், நகரமன்ற தலைவர் விஜயகண்ணன், கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார். இதையடுத்து, குப்பைகளை சேகரிக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை கவுரவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் கண்ணன், பணி கண்காணிப்பாளர் சரவணன், சுகாதார அதிகாரி ராமமூர்த்தி, சுகாதார ஆய்வார்கள் சந்தானகிருஷ்ணன், ஜான்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.